தேசிய மின்கட்டமைக்கு குறைக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தி

இலங்கை மின்சார சபை (CEB), கடந்த வாரம் தேசிய மின்கட்டமைப்புக்கு சூரிய மின் உற்பத்தியைக் குறைக்க ஆரம்பித்துள்ளது.
இதன்படி, சிறிய அளவிலான தரைவழி மின் உற்பத்தியாளர்கள், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சாரசபை அறிவுறுத்தியுள்ளது.
2025 பெப்ரவரி 16 ஆம் திகதியன்று இந்த விடயம் உற்பத்தியாளர்களுக்கு வாய்மொழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டதால், இந்த அறிவுறுத்தல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், இலங்கை மின்சார சபைக்கும், இந்த உற்பத்தியாளர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் அத்தகைய குறைப்புக்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை பொது பயன்பாட்டு ஆணையகம், இந்த குறைப்புக்கள் குறித்து மின்சாரசபையிடம் இருந்து அறிக்கையை கோரியுள்ளது,
ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு முன் அறிவிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை பெப்ரவரி 9 ஆம் திகதியன்றே, நாடு தழுவிய மின்சார தடை நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.