News

நாட்டின் மருந்து உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழிற்சலைகள்!

நாட்டின் மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக உயர்த்த முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதனை அடைவதற்காக 12 புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் முதலீடுகள் வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தனியார் துறையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களில் ஒன்றான “நவலோக மெடிகேர் (தனியார்) நிறுவனம்” என்ற பெயரில் நீர்கொழும்பில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனை கட்டிடத்தை சிகிச்சை சேவைகளுக்காக அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது இந்த நாட்டில் மருந்து உற்பத்தி 14 வீதத்திற்கும் 15 வீதத்திற்கும் இடையில் உள்ளது. அதனை அதிகரிப்பது இலகுவான விடயம் அல்ல. ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் அமைச்சுக்கு இருக்கிறது.

சுகாதாரத்துறையில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது அதிக முதலீடாக இருக்க வேண்டும். அவ்வாறான முதலீடு இலாபகரமானதாக அமையாது என எதிர்பார்க்கப்பட்டாலும் சவால்களை சமாளிப்பது இலகுவானதல்ல.

குறிப்பாக இலங்கையில் மருந்து உற்பத்தி செயன்முறைக்கு வரிச்சலுகை உள்ளிட்ட ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இலங்கையில் மருந்து உற்பத்திக்கு தேவையான 30 முதல் 35 வீதமான மூலப்பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் இருக்கிறது.

அதனை சமாளிக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

உலகில் எந்த ஒரு நாடும் அனைத்து பொருட்களையும் தனது நாட்டில் உற்பத்தி செய்வதில்லை.

அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட சில பொருட்களை வேறு நாடுகளில் இருந்து கொண்டு வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் 50 வீதமான மருந்து உற்பத்தி மிகவும் நல்ல இலக்காகும்.” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button