News

வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி!

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமான தொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய தினம் 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் வழங்குவது யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி நியமனங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீனை தொடர்பு கொண்டு கவலையை தெரிவித்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனங்களின் போது ஒரே முறையில் 7 ஆயுர்வேத வைத்தியர்களும் இரு யூனானி வைத்தியர்களும், ஒரு சித்த வைத்தியரும் உள்வாங்கப்பட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இன்றைய தினம் வழங்கப்பட இருக்கின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்களில் யூனானி வைத்தியர்கள் உள்ளீர்க்கப்படாமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதுடன் இது யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தான் கருதுவதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரிஷாட் பதியுதீன் மேலும் சுட்டிக்காட்டியுளார்.

மேற்படி ஆயுர்வேத வைத்தியர்களின் நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தங்களது கவனத்தை செலுத்துமாறும் அது போன்று பாதிக்கப்பட்டுள்ள யூனானி வைத்தியர்களுக்கு நியாயத்தை பெற்று கொடுப்பதுடன், மேற்படி நியமனத்தில் யூனானி வைத்தியர்களையும் இணைத்துக் கொள்வதற்கு தேவையான பணிப்புரையினை உரிய அதிகாரிகளுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டியுள்ளார்.

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதி தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button