News

இலங்கை அணி திரில் வெற்றி: சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது

ஆப்கானிஸ்தானை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ​மெண்டிஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் நயீப் 4 விக்கெட்டுக்களையும், ரஷீத்கான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதேவேளை, சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி தெரிவாவதற்கு 37.1 ஓவர்களில் 292 என்ற வெற்றி இலக்கை கடக்க நிர்ணயிக்கப்பட்டிருந்து. அதன்படி, 38 ஆவது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசிய போது இரண்டு விக்கெட்டுக்கள் மீதமிருந்த நிலையில் ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது.

தனஞ்சய டி சில்வா வீசிய முதல் பந்தில் முஜீப் ரஹீம் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தெரிவானது. அதனை தொடர்ந்து அதே ஓவரில் 4 ஆவது பந்தில் பர்ஹக் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி 2 ஓட்டங்களால் போட்டியிலும் வெற்றி பெற்றது.

அதன்படி, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ஆப்கான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நபி 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அதன்படி, சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button