News

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்!

எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

இதேவேளை, மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகிப்பதற்கான அனைத்து சேவைகளையும்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button