News

EPFக்காக டிஜிட்டல் தரவு அமைப்பு!

மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குக் குழு, அறிவுறுத்தியுள்ளது.

தொழிலாளர் திணைக்களத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குக் குழு, பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் கூடிய போதே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் திணைக்களத்தில் முதலாளிகளைப் பதிவு செய்த பின்னர், குறித்த ஊழியர் சேமலாப நிதி, மத்திய வங்கிக்கு வழங்கப்படுவதாகவும், மத்திய வங்கி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழிலாளர் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள் பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எனினும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தரவுகளைப் பெறுவதற்குப் பதிலாக, தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பை தொழிலாளர் திணைக்களம் கொண்டிருக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது மக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி மற்றும் தொழிலாளர் அலுவலகம் இணைந்து கூடிய விரைவில் கூட்டத்தை நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

டிஜிட்டல் தரவு அமைப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியை செலுத்த தவறிய நிறுவனங்கள் மீது தற்போது 15,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button