News

ரணிலுக்காக அணிதிரளும் மொட்டு அமைச்சர்கள் : பெருகும் ஆதரவு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 48 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் இரண்டு இடங்களில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை (24) நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் 18 பேர் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நியமித்தால் ஏற்படும் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியதாக அந்த வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தருணத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு இரு தரப்பினரின் இறுதி உடன்படிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், அரசியல் அலுவலகம் ஸ்தாபித்தல், வாக்களிப்பு முகவர்கள் நியமனம், ஊடகப் பணிகள் போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விரிவான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அரசால் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க, தொகுதி அளவில் முறையான பொறிமுறையை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button