News

தீர்மானத்தை மாற்றிய கிராம உத்தியோகத்தர்கள்!

இன்று (18) நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர், தேர்தல் உத்தியோகத்தர் என்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க இன்று (18) தெரிவித்தார்.

கிராம அலுவலர் சேவை யாப்பு மற்றும் கிராம அலுவலர் கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி நாடு முழுவதிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் கடந்த மே மாதம் 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கினர்.

எனினும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஓகஸ்ட் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கறுப்புப் போராட்ட வாரத்தை ஆரம்பித்திருந்த நிலையில், அது இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக அந்த கூட்டமைப்பின் இணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மே 17ஆம் திகதி முதல் இதுவரை காலமும் கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி சேவை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button