News

இணையப்பதிவு முறை நீக்கம்: புதிய முறைமை குறித்து வெளியான தகவல்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறைக்கமைய, குடிவரவுத் திணைக்களத்திற்கு வருகை தரும் வரிசையின் அடிப்படையில் ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 400 கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 250 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் இ – கடவுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை, பொதுமக்கள் தங்களுடைய தற்போதைய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில் 51 பிரதேச செயலகங்கள் ஊடாக இணையக்கடவுச்சீட்டு முறையை இலங்கை அறிமுகப்படுத்தியது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையின் கீழ், மக்கள் மூன்று நாட்களுக்குள் 15,000 ரூபா மற்றும் 14 நாட்களுக்குள் 5,000க்கு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும், இணையக் கடவுச்சீட்டுக்கள் அமைப்பு பல சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் தோல்வியடைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button