இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்!

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று (28) ஆராய்ந்திருந்தது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கிறது.
இதேவேளை சமூக செலவினங்களுக்கான இலக்கைத் தவிர, ஏனைய அனைத்து இலக்குகளிலும் அளவு மட்டத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகவும் பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாகவும் பணவீக்கம் குறைவாக உள்ளதுடன் வருமானம் அதிகரித்து வருகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பொருளாதார மீட்சி 2025ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாக இருப்பதால், பேரண்டப் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சீர்திருத்த உந்துதலைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.