13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த முக்கிய நாடு

13 நாடுகளுக்கு சவுதி அரேபியா (Saudi Arabia) தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்த தடை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி,
- பாகிஸ்தான் (Pakistan)
- இந்தியா (India)
- பங்களாதேஷ் (Bangladesh)
- எகிப்து (Egypt)
- இந்தோனேசியா (Indonesia)
- ஈராக் (Iraq)
- நைஜீரியா (Nigeria)
- ஜோர்டான் (Jordan)
- அல்ஜீரியா (Algeria)
- சூடான் (Sudan)
- எத்தியோப்பியா (Ethiopia)
- துனிசியா (Tunisia)
- ஏமன் (Yemen) ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவுதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.
இதனடிப்படையில், சிலர் சவூதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி பின்னர் ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகையால், இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்வதாகவும் விசா நிபந்தனைகளை மீறுவதுடன் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குவதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஹஜ் பருவத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.