நாட்டில் அழிந்து போகும் நிலையில் சுதேச மருத்துவம்
இலங்கைக்குரிய (Srilanka) சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளதாக அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி எச்சரித்துள்ளார்.
யாழ். (jaffna) ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே பார்த்தீபன் உமாதேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, யுனானி, என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது.
இந்த கற்கை நெறியை நிறைவு செய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர்.
இதேநேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் அல்லது போக்கில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது.
மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம், ஆனால் அரசு மௌனமாக இருக்கின்றது.
அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர்.
ஆனால் கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும். இந்த போக்கால் இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப் போகும் நிலையே உருவாகின்றது.
நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை.
இவ்வாறான நிலையில் மேலதிக தகைமை என்று கூறி வேறு வேலைகளுக்கு கூட எம்மை இணைத்துக் கொள்கின்றார்கள் இல்லை என்றும் கூறிய அவர் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.