இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி (திங்கட்கிழமை) முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஒழிப்பு வழக்கு தொடர்பாக, ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரணில் விக்ரமசிங்கவுக்கு முதலில் அழைப்பாணை விடுத்திருந்தது.
முந்தைய அழைப்பாணைக்கு பதிலளிக்கும் விதமாக, ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்,
ஆனால் புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது வழக்கறிஞர்கள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால் வேறு திகதியைக் கோரியிருந்த நிலையில் ஆணைக்குழு அவருக்கு புதிய திகதியை வழங்கியதுடன், இன்று (25) காலை 09.30 மணிக்கு முன்னிலையாகுமாறு கேட்டுக் கொண்டது.
எனினும், தனது சட்டத்தரணி இன்னும் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் வந்ததும் ஒரு திகதியை வழங்குவதாகவும் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி (திங்கட்கிழமை) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.