நாட்டில் மீண்டும் மின் தடையா…! மின்சார சபையின் அறிவிப்பு

நுரைச்சோலை 3 வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (13) நள்ளிரவு முதல் இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
எனினும், 2 மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ளதால் மின்சக்தி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவதால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்.
3வது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்நிலையத்தின் 1வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம், அடுத்த சில நாட்களில் மின்சக்தி உற்பத்திக்காக மீண்டும் இணைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 165 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.