யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் (Nagapattinam) – இலங்கை (Sri Lanka) காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
சென்னை (Chennai) மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கமைய இன்று (14) முதல் வருகிற 18ஆம் திகதி வரை குறித்த பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்க்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி குறித்த பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் ஆரம்பமாகியது.
சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும் வருகிற 16ஆம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமான இன்று (14) முதல் வருகிற 18ஆம் திகதி வரை நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.