கொழும்பு அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி

பல ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் கண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் பல தசாப்தங்களாக கொழும்பு நகராட்சியை கைப்பற்றி வைத்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
வ்ராய் கெலி பல்தசார், ஒரு சமூக சேவகராகவும் முன்னாள் ஊடக தொகுப்பாளராகவும் அறியப்படுகின்றார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தங்கள் அணியை வழிநடத்த தேசிய மக்கள் சக்தியால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொழும்பு மாநகர சபையின் 117 ஆசனங்களில் 48 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வென்ற நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் மேயரை தெரிவு செய்வதில் குழப்பநிலை நிலவியது.
எவ்வாறாயினும், சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 64 வாக்குகளைப் பெற்ற வ்ராய் கெலி பல்தசார் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, வரலாற்றில் மூன்றாவது முறையாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒருவர், கொழும்பு மாநகர சபையின் மேயராக பதவியேற்றுள்ளார்.
இதற்கு முன்னர், 1950ஆம் ஆண்டில் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த என்.எம். பெரேரா மற்றும் 2006ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான உவைஸ் எம். இமிடியாஸ் ஆகியோர் கொழும்பு மாநகர சபையின் மேயர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.