வட மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் சேவையின் தரம் 3 க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பதில் செயலாளர் எ. அன்ரன் யோகநாயகம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பாடச வலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை யின் 3ம் வகுப்பு – 1(அ) தரப் பதவிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த 20ம் திகதி கோரப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு, இவ் ஆசிரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதில் செயலாளர் எ.அன்ரன் யோக நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி “நாகரிகமான பிரஜை – முன்னேற்றகரமான மனித வளத்தை” உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.