டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு…! ஆட்டம் காணும் உலக நாடுகள்

அமெரிக்காவிற்கு (USA) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
170 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் உள்ள சிக்கல்களை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
அயோவாவுக்குப் பயணிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக 10 நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பப்படும் என்றும், அவை 20% முதல் 30% வரையிலான கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் என டிரம்ப் தெரிவித்தார்.
எங்களிடம் 170 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இவ்வளவு நாடுகளுடன் எத்தனை ஒப்பந்தங்களைச் செய்ய முடியும்? அவை மிகவும் சிக்கலானவை.
கடந்த புதன்கிழமை வியட்நாமுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற சில நாடுகளுடன் “ஒரிரு” விரிவான ஒப்பந்தங்களை எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், பெரும்பாலான நாடுகளுக்கு விரிவான பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட கட்டண விகிதத்தை அறிவிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
வரி விதிப்பு முதல் விவசாய இறக்குமதிகள் மீதான வரி அல்லாத தடைகள் வரை, வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பதில் உள்ள சவால்களை டிரம்பின் கருத்துக்கள் எடுத்துரைக்கின்றன.