மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

மாகாண சபைத் தேர்தலில் உள்ள சட்ட சிக்கல் நீக்கப்படும் வரை தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (2026-2029) தொடர்பான கலந்துரையாடல் இன்று (05) இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் அதற்கு இன்றுவரை அனுமதி கிடைக்காதலால் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதில் சட்ட சிக்கல் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சட்ட சிக்கல் நீக்கப்படும் போது தேர்தல் ஆணைக்குழுவானது மாகாண சபை தேர்தலை நடாத்த எந்த சந்தர்ப்பதிலும் தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது மக்கள் வாக்களிப்பு பங்கேற்பை அதிகரித்தல், தேர்தல் சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் பங்களிப்பை அதிகரித்தல் போன்றவை மற்றும் எதிர்காலத் திட்டமிடல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல். தேர்தல் முறையில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி புதிய சட்ட திட்டங்களை கொண்டுவருதல், நவீன தொலை தொடர்பு வசதிகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர் இடாப்பு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இதில் அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டுபவர்கள் கலந்துகொண்டு பங்களிப்பு மூலோபாய எதிர்கால திட்டம் (2026-2029) தொடர்பான தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந் நிகழ்வில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ்.மாதவ, திட்டமிடல் பணிப்பாளர் சன்ன பி.டி. சில்வா மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.