News

இலங்கை விசா கட்டண விலக்கு – கோரிக்கை விடும் சர்வதேச நாடுகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் தங்களுடைய நாட்டுக்கும் இந்த கட்டண விலக்கை கோரியுள்ளதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை ஏழு நாடுகளுக்கு இந்த வசதியை வழங்கியிருந்தது.

தற்போது 40 நாடுகளைப் பட்டியலில் சேர்க்க அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

புதிய விசா ஒழுங்குமுறை, சட்டமா அதிபரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த முடிவுக்கு சட்டப்பூர்வ நடைமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை இந்த மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடைமுறைக்கு வந்தவுடன், 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்குப் பயணம் செய்ய இலவச விசாவிற்கு நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம்.

இதேவேளை இந்த வசதியை தங்கள் குடிமக்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல நாடுகள் விசாரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில், இலங்கை அதன் முக்கிய மூல சந்தைகளாக இருக்கும் நாடுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

பட்டியலில் மேலும் பல நாடுகள் சேர்க்கப்படுவது குறித்து கேட்டபோது, தற்போதைய முடிவைச் செயல்படுத்துவதில் வெற்றி பெற்ற பிறகு அது பரிசீலிக்கப்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button