News

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு – பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(11) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் வெளிகளில் விளையாடும் போது சிறுவர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  சிறுவர்களுக்கு தற்போது பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிகமாக சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விளையாடக்கூடும். அவ்வாறு செல்லும் போது பாதணிகளை அணியவும்.

சதுப்பு நிலங்கள் மற்றும் வயல்வெளிகளில் விளையாடும் சிறுவர்களுக்கு, ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு காய்ச்சல், கண்கள் சிவத்தல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் மற்றும் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை நாடவும்.

குறித்த நோய் அறிகுறிகள் எலிக்காய்ச்சலுக்கு வழிவகுக்கும். இவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் அது சிறுநீரகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை தற்போது டெங்கு நோயின் தாக்கம் குறைந்திருந்தாலும் சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுமாறும் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button