News

தேர்தலை முன்னிட்டு அவசரகால பாதுகாப்பு திட்டம் – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.

காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்தே குறித்த ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிக்கவுள்ளனர்.

பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் அவசரகால நிலை ஏற்படக்கூடும் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையினாலேயே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அவசர நிலையில் காவல்துறையினருக்கு உதவியாக இராணுவத்தை களமிறக்குவது மற்றும் இராணுவம் தனது அதிகாரங்களை அவசர காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழ் முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர்கள் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

அதற்கான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 18ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button