News

டொலரின் பெறுமதி தொடர்பில் எச்சரிக்கும் ரணில்

டொலரின் பெறுமதி 500 ரூபாவாக அதிகரித்தால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை உள்ளடக்கியதாகவே 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு இணங்க நாம் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தால் அடுத்த வருடத்தின் வருமானம் மற்றும் செலவுக்கிடையில் 1000 பில்லியன் ரூபா நிலுவை ஏற்படும்.

அதனை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் சர்வதேச நிதி சந்தையில் கடன் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தேசிய உற்பத்தியில் 5 வீதத்திற்கும் அதிகமான கடன் ஒத்துழைப்புகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் திசைக்காட்டியில் யோசனைகளை நடைமுறைப்படுத்தினால் நிலைமை சிக்கலாகும். தேசிய மக்கள் சக்தியினரின் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் அவர்களுடன் விவாதமொன்றை மேற்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.

அவர்கள் அது தொடர்பில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தாலும், அதற்கான நேரத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதைக் குறிப்பிட வேண்டும்.

அவர்களின் திட்டங்கள் வறுமை நிலை மக்களே அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளன. எனினும் நமது நாடு நடுத்தர நாடாகும்.

திசைகாட்டியின் வரவு செலவுத்திட்ட யோசனையின்படி அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுக்கிடையில் பெரும் இடைவெளி உருவாகும். அது நாலாயிரம் பில்லியன் ரூபாவாகும்.

எமது தேசிய உற்பத்தி வருமானத்தை நோக்கும் போது அது 11.2 வீதத்துக்கு அதிகமாகும். அவ்வாறு ஏற்படும் நிலுவையை நிவர்த்தி செய்வதற்கு சர்வதேச நிதி சந்தைகளில் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போகும்.

அப்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் இரத்தாகும். அவ்வாறானால் சர்வதேச நிதி சந்தையில் வட்டி வீதம் 25 வீதமாக அதிகரிக்கும். டொலரின் பெறுமதி 500 ரூபாவாக அதிகரிக்கும் இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button