இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக இணையத்தளம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் பிரத்தியேக இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் வசதி கருதி சேவைகளை வழங்குவதற்காகவே daladadekma.police.lk என்ற பிரத்தியேக இணையத்தளத்தை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியானது புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களுக்கு சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்களையும் ஆதரவையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போக்குவரத்து நிலைமைகள் குறித்த தகவல்கள், புனித யாத்திரை பாதைகளின் விரிவான வரைபடங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், வாகனத் தரிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
புனித தந்த தாதுவை வழிபடவரும் பக்தர்களின் பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும் அசௌகரியங்கள் இல்லாததாக மாற்றவும், யாத்திரீகர்களுக்கான முக்கியமான பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் அவசர தொடர்புத் தகவல்களையும் இந்த இணையத்தளம் ஊடாக அணுகலாம்.
daladadekma.police.lk என்ற இணையத்தளம் தொடங்கப்பட்டதன் மூலம் பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.