வெளிநாட்டவர்களுக்கான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட சேவை முனையத்தின் மூலமாக தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, தற்போது வரை குறைந்தது 120 தற்காலிக உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த உரிமங்கள், அவர்களின் விசா காலத்தையும், தங்கள் நாட்டில் பெற்றுள்ள செல்லுபடியான ஓட்டுநர் உரிமத்தையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சுற்றுலா பயணிகள் இலங்கை வருகையின் போது, மிக மிக குறுகிய காலத்திலான சுமார் 10 நிமிடங்களுக்குள் இத்தகைய தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது முச்சக்கரவண்டிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் கோரப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர கிளை கடந்த வருடங்களில் 14,293 ஓட்டுநர் உரிமங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கியுள்ளது.
இதன் கீழ், 2023 ஆம் ஆண்டு 3,000 உரிமங்கள், 2024 ஆம் ஆண்டு 2,915 உரிமங்கள் மற்றும் 2025ஆம் ஆண்டில் இதுவரை 2,476 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 5,757 தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வெளியிடப்பட்டுள்ளன.