News

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இலகு தொடருந்து திட்டம்

இலங்கையில் இலகு தொடருந்து  திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக முதல் மதிப்பீட்டை விட அதிக தொகை செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை அரசு மற்றும் ஜப்பான் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி அடுத்த வருடத்தில் பொது வசதிகள் இடமாற்றம் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் செயற்படுத்தப்படும் எனவும் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலகு தொடருந்து திட்டத்திற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படை விடயங்களுக்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது.

இதேவேளை மாலபே முதல் கோட்டை வரையிலான கட்டுமானம் தொடர்பான விரிவான திட்டங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ஏல ஆவணங்கள் மதிப்பீடுகள் மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button