News

புத்தாண்டில் பேரிடி – யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி ஒன்றில் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்ட பெண் ஒருவர் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டார்.

இப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றுப் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப் பட்டதாக யாழ்.போதனா வைத் தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும் அவர் கூறினார். இப்பெண் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே தொற்றுக்குள்ளாகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பொதுமக்கள் தொற்றுநோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்துகொள்வது அவசியம் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

வைத்தியத் துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று நோய் குறித்த மேலதிக ஆய்வுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் விடுதிகள் தற்போது இல்லை. கொவிட் தொற்று உச்சத்தில் இருந்த போது அமைக்கப்பட்ட விடுதிகள் தொற்று நோய் குறைந்த பின்னர் அகற்றப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்ட நோயாளி விடுதி ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button