பிரித்தானியாவிற்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
![](https://asalfm.com/wp-content/uploads/2023/03/22-780x470.jpg)
3ஆம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தலவல்கள் வெளியாகியுள்ளன.
3ஆம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளார்.
2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆம் சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இதன் பிரகாரம், 3ஆம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர்.
இதன்படி இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.