News

வெளிநாட்டுக்கு படையெடுக்கும் மற்றுமொரு குழுவினர்: ஏற்படப்போகும் சிக்கல்!

நாட்டிலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் சியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகப் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த 5 வருடங்களை விடக் கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சடுதியாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெளிப்படையாகக் கலந்துரையாடி இப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாலும், அரச சேவைக்குப் புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளாத அரசாங்கத்தின் முடிவினாலும் பல்கலைக்கழக கல்வித்துறை பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 150 வைத்தியர் வெற்றிடங்களும் பேராதனை பல்கலைக்கழகத்தில் சுமார் 100 வைத்தியர் வெற்றிடங்களும் உள்ளது.

மேலும், சில பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்துவதற்கு போதிய விரிவுரையாளர்கள் இல்லை.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிவிதிப்பு முறையினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுமார் 36 சத வீதமானோர் வரி சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனால் அவர்கள் சம்பளத்திற்கு ஏற்றவாறு செலவுகளை நிர்வகித்தாலும், இந்த நியாயமற்ற வரிக் கொள்கையால், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்பு செலுத்திய வரித் தொகையைவிட மூன்று மடங்கு அதிகம் சுமையை எதிர்கொள்கின்றனர்.

இதன்படி, சில விரிவுரையாளர்களின் சம்பளம் மறை நிலைக்குச் சென்றுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button