News

இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று முதல் 2 மணித்தியாலங்களை டெங்கு ஒழிப்புக்காக ஒதுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரச நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைகள் தோறும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதற்கான சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அனைத்து பகுதிகளிலும் உரியவகையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,420 பேர் மேல் மாகாணத்திலும் 8371 டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியில் 61 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவு தொடர்ந்தும் டெங்கு அதி அபாய வலயங்களாக காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button