News

ரணிலுடன் இணைய பலர் விரும்பம் – சஜித்துக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருதுவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, எந்தவொரு தருணத்திலும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய மாட்டாது என அதன் தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருந்த நிலையில், ரவூப் ஹக்கீமின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

கண்டி குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நாட்டின் நலனுக்காக அதிபர் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பினால் அவருடன் இணைந்து செயற்பட முடியும் என தெரிவித்தார்.

எனினும் தற்போது அதிபர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், அதிபருடன் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எந்தவொரு உடன்படிக்கை அல்லது கலந்துரையாடலும் கொள்கையின் அடிப்படையில் அமைய வேண்டுமேயன்றி, அரசாங்கத்தை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்கும் நோக்கத்துடன் அல்ல என ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button