News

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கை இடம்பெறுவதை ஏற்றுக் கொள்கின்றோம்.

பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச தராதரங்களுக்கேற்ப காணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அத்துடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதற்கட்ட நடவடிக்கையை எடுக்கிற நிலையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறல், அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நிலங்களை விடுவித்தல், நீண்ட கால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவற்றை குறித்த கரிசனைகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.

இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக இது அமையலாம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button