News

தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் – வடக்கு மக்களுக்கான அறிவிப்பு

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவிக்கையில்,

“ வடக்கு மாகாணத்தில் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளம் கிடையாது.

வடக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் ஒருநாள் சேவை விநியோகத்தை ஆரம்பிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை விநியோகம் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வட மாகாண மக்கள் குருநாகல் மாவட்டத்தில் ஒருநாள் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு வட மாகாணத்தில் இருந்து 25 சதவீதமானோர் கூட வருகை தரவில்லை. 5 சதவீதத்துக்கும் அதிகமானோர் மாத்திரமே வருகை தருகின்றனர்.

நிறைவடைந்த இந்த 06 மாத காலப்பகுதியில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை ஊடாக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு 112,596 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இவற்றில் 4,968 விண்ணப்பங்கள் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுடையது.” என  குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button