News

வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சிகளை இறக்குமதி செய்ய அதிபர் இணக்கம்

சந்தையில் கோழி இறைச்சியின் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் முடிவொன்றை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அதிபர் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி அதிபர் தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த தீர்மானத்தின் மூலம் சந்தையில் கோழி இறைச்சியின் விலை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் நுகர்வுக்காக கோழியை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் விவசாய அதிகாரிகளுக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், அதிக கோழி குஞ்சுகளை பொரிப்பதற்காக தாய் கோழிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button