News

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்!

அடுத்த வருடம் (2024) இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். இதன்படி, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என பாராளுமன்ற உறுப்பனர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம். சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லை. அவ்வாறான வழிமுறை ஏதும் கிடையாது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க எவ்வித தீர்மானங்களும் இதுவரை எட்டப்படவில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நிலைப்பாடு எமக்கு கிடையாது. அரசியல் அனுபவமற்றவர்களே அவரை களமிறக்குவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button