News

அரசு ஊழியா்களின் சொத்துப் பட்டியலை வெளியிட முடிவு!

அரசு ஊழியா்களின் சொத்துப் பட்டியல்களை இணையதளத்தில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், அரசுத் துறைகளில் ஊழலைத் தடுக்கும் வகையில் அரசு ஊழியா்களின் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த பொது நல வழக்கில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் பதில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், வருமான வரித் துறையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அலுவலா்கள் இணையவழியில் தங்களது அசையா சொத்துகளின் விவரங்களை வெளியிடுகின்றனா் என்றும், மத்திய அரசின் ஒட்டுமொத்த ஊழியா்களின் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று தங்களால் உத்தரவிட முடியாது என்றும், அதை அந்தந்த துறைகளின் தலைமைதான் முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலா், உள்துறைச் செயலா் ஆகியோா் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக அரசு ஊழியா்கள் பணி ஒழுக்க விதிகளின்படி, தங்கள் பெயரிலும், குடும்ப உறுப்பினா்கள் பெயா்களிலும் சொத்துகளை வாங்கினாலும், விற்பனை செய்தாலும், அதன் விவரங்களை தலைமை அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யவேண்டும் என்றும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தங்களது அசையா சொத்துகளை ‘ஸ்பேரோ’ என்ற இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை இணையவழியில் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும் நடைமுறை உள்ளதாகவும், ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை முதன்மை தலைமை வன பாதுகாவலரிடம் சமா்ப்பிக்கின்றனா் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆண்டுதோறும் அரசு ஊழியா்களின் சொத்துப் பட்டியலை வெளியிட முடியுமா? என்று அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடா் பி.முத்துக்குமாா், அரசு ஊழியா்கள் பணி ஒழுக்க விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியா்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனா் என்றும், அரசு ஊழியா்களின் சொத்துப் பட்டியல்களை இணையதளத்தில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button