News

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் – வர்த்தமானி வெளியீடு

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் காவல்துறையினர் அல்லது காவல்துறை சேவைக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சமீப காலமாக இலங்கையில் காவல்துறையினரிற்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையிலேயே மேற்படி வர்த்தமானி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் அல்லது எந்தவொரு மாகாண அலுவலகத்திலும் காவல்துறை தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த காவல்துறை நிலையம் மற்றும் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளின் அடையாளம் போன்ற விபரங்களையும் பொதுமக்கள் பதிவு செய்யலாம் எனவும் குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எந்தவித தாமதமும் இன்றி ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக விசாரணை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க ஆணைக்குழு முயற்சிக்க வேண்டும் எனக்  கூறப்பட்டுள்ளது.

மேலும் குற்றத்திற்கான ஆதாரம் கண்டறியப்பட்டால் தேவையான நடவடிக்கைக்காக இந்த விவகாரம் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button