வாகன இறக்குமதிக்கு தடை நீக்கம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
![](https://asalfm.com/wp-content/uploads/2023/03/36-780x470.jpg)
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (30) மாலை யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவற்றில் 3,000 வாகனங்கள் காவல்துறை திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப்கள் என குறிப்பிட்டார்.
ஆம்புலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்காலத்தில் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.