News

சிறிலங்கன் எயர்லைன்ஸ் குறித்து வெளியான தகவல்

சிறிலங்கன் எயர்லைன்ஸை (SriLankan Airlines) தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத்கனேகொட (Sarath Ganegoda) தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக சிறிலங்கன் எயர்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிரிஜி ஏசியாவிற்கு (TTG Asia) வழங்கியுள்ள நேர்காணலில் சிறிலங்கன் எயர்லைன்ஸின் புதிய தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  சிறிலங்கன் எயர்லைன்ஸ் என்பது அனைத்து இலங்கையர்களும் பெருமைப்படும் நிறுவனமாக விளங்கவேண்டும் அதன் உரிமையாளர்களாக இலங்கையர்களே விளங்கவேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் பல வருடங்களாக நஷ்டத்தை சந்தித்து வருவதால், அதனை கையகப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் கடந்த அரசாங்கம் ஏலங்களை அழைத்திருந்தது.

அந்த திட்டத்தின் கீழ், விமான நிறுவனத்தின் 51% பங்குகள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் எனவும் மீதமுள்ள 49% முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு, 6 ​​தரப்பினர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் அமைப்பின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறவில்லை.

இதற்கிடையில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலப்பகுதியில் இயக்க லாபத்தையும் பதிவு செய்ய முடிந்தது. அதன் திரட்டப்பட்ட கடன் 1.2 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது.

நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 50% பேர் சிறிலங்கன் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டிற்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட  இலங்கை, 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 3 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.“ என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button