தேசபந்து தென்னகோனின் ரிட் மனு …! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி உயர் நீதிமன்றில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிப்பேராணை (ரிட்) மனு தொடர்பான தீர்மானம் இன்று (17) அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்களும் தங்களைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று (16) அறிவித்தது.
அதன்படி, முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை குறித்த ஆறு நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அவர்களது நீதிப்பேராணை மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளன.
தேஷபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா, வெலிகம காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபுல் குமார உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டது.
2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று வெலிகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த 8 சந்தேகநபர்களில், வெலிகம காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரி உபுல் குமார, சட்டத்தரணி ஊடாக கடந்த 4 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் தேஷபந்து தென்னகோன் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்த நிலையில் அது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சுமார் மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், தேஷபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்வதற்கு ஆறு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் தேஷபந்து தென்னகோனின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.