News

இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்!

உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியானதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவாக களமிறக்குவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புறக்கணித்து செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாத்து காட்டு சட்டத்தை இல்லாதொழித்தார். ஆகவே நன்றி மறக்கமாட்டோம்.

ஏதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தீர்மானமிக்கதாக அமையும். எம்முடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டால் ஒன்றிணைந்து செயற்படலாம். அரசியல் ரீதியில் அவர் தனித்து செயற்பட்டால் அதற்கு நாங்கள் முழுமையாக இடமளிப்போம்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது. ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி என்ற ரீதியில் இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

கட்சியை பலப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் தொகுதி அமைப்பாளர் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வெளியானதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவாக களமிறக்குவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாட்டு மக்கள் ராஜபக்சர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற்றமடைவோம். இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button