News

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.05.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது.

அத்தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள பின்வரும் முன்மொழிவுகளுக்கு கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்கும், குறித்த முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி அமுல்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ஒட்டுமொத்த அரச சேவையிலுள்ள அனைத்துப் பதவிகளையும் நான்கு பிரதான மட்டங்களின் கீழ் வகைப்படுத்தி ஒவ்வொரு வகுதிக்கும் இலங்கைத் தராதர வழிகாட்டல் ( SLQF ) மற்றும் தேசிய தொழில் நிபுணத்துவம் ( NVQ ) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய தொழிலின் பணிப்பொறுப்புக்கள் மற்றும் விசேட தொழில்களுக்கான நிபுணத்துவத்துமுடைய ஊழியர்களை கவர்ந்திழுப்பதற்கும், தொழில்களைத் தக்கவைத்தலைக் கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்புத் தகைமைகளை உபவகுதிகளுக்கு வகைப்படுத்தல்.

• ஆரம்பநிலை சேவை வகுதிகளுக்கும் ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமைகளாக இலங்கை தராதர வழிகாட்டல், தேசிய தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சேவைத் தேவைகளுக்கேற்ப பொருத்தமான முறையமையைப் பின்பற்றுதல்.

• ஏனைய அனைத்துச் சேவை வகுதிகளுக்கும் முறைமைப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை முறை மூலமாக மட்டும் ஆட்சேர்ப்புச் செய்தல்.

• அதற்கமைய, தகைமைக்கு ஏற்புடைய வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு ஒழுங்குவிதிகளை துரிதமாகத் திருத்தம் செய்தல்

• 2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000/- ரூபாவை வழங்கல்.

• அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24% வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக ரூபா 55,000/- வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல்.

• அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல்.

• 2030 ஆம் ஆண்டாகும் போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ (1,000,000) அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• அதற்கமைய, 2025 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல்மயப்படுத்தல் ( Digitalization ) மற்றும் தன்னியக்க ( Automation ) முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை ( E- Governance ) அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரச முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்குதல்.

• அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது 1000 ரூபா மாதாந்தப் பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.

• இயன்றவரை வெளியகச் சேவைகள் ( Outsourcing ) போன்ற முறைமைகள் மூலம் அரச செலவுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் உயர்வான வினைத்திறனான வகையில் நியம முறைமைகளைப் பின்பற்றி சேவைகளைப் பெறுதல்.

• அடையாளம் காணப்பட்ட திணைக்களங்கள் / கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சபை நிறுவனங்களை பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளாக ( Public Liability Company ) மாற்றுவதற்கான மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்துதல்.

• தகுந்த வேலை ஆய்வை மேற்கொண்டு, ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல்.

• அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல்.

• 2020 அம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்.

• ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50% வீதத்திற்குச் சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்.

• தற்போது காணப்படுகின்ற வரிக் கொள்கையில் இச்செலவுகளை முகாமைத்துவப்படுத்தி, இச்சம்பள முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025.01.01 தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button